குன்னூரை அழகுபடுத்தும் பணி: சாலையோர சுவர்களில் ஓவியம் வரையும் தன்னார்வலர்கள்


குன்னூரை அழகுபடுத்தும் பணி: சாலையோர சுவர்களில் ஓவியம் வரையும் தன்னார்வலர்கள்
x
தினத்தந்தி 20 Sep 2020 3:45 PM GMT (Updated: 20 Sep 2020 3:46 PM GMT)

சாலையோர சுவர்களில் ஓவியம் வரைந்து குன்னூரை அழகுபடுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குன்னூர்,

குன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் மும்பை, பெங்களூரு, சென்னை உள்பட பல இடங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் வேலை இழந்து பலரும் தங்களது சொந்த ஊரான குன்னூருக்கு திரும்பி விட்டனர். மேலும் பலர் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இதில் சிலர் தன்னார்வ குழுவினருடன் இணைந்து குன்னூரை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி சாலையோரங்களில் உள்ள தடுப்பு சுவர்களில் வன விலங்குகள் மற்றும் பறவைகளின் ஓவியம் வரைந்து வருகின்றனர். மேலும் இயற்கை சுற்றுச்சூழல், வன விலங்குகளை பாதுகாப்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரைந்து வருகின்றனர். இந்த ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-

குன்னூர் நகரை அழகுபடுத்தும் வகையில் சுற்றுச்சுவர்களை பொலிவுபடுத்தி ஓவியங்கள் வரைந்து வருகிறோம். ஊரடங்கு காலத்தை எல்லோரும் இணைந்து பயனுள்ளதாக மாற்றி வருகிறோம். நீலகிாி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டாமல் சுத்தமாக வைக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story