பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக தகவல்


பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக தகவல்
x
தினத்தந்தி 20 Sep 2020 11:00 PM GMT (Updated: 20 Sep 2020 10:06 PM GMT)

பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். அவர் நடிகைகளுக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூரு,

போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகைகளின் நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வீரேன் கண்ணா, ஆதித்யா அகர்வால், லோயம் பெப்பர் சம்பா, பிரதிக் ஷெட்டி, வைபவ் ஜெயின், பிரசாந்த் ரங்கா, பினால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ராகிணி, சஞ்சனா உள்பட 14 பேர் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் போதைப்பொருள் விற்பனையில் பெங்களூருவை சேர்ந்த சீனிவாஸ் சுப்பிரமணியன் என்கிற ஸ்ரீக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் அவர் கடந்த சில மாதங்களில் 3 முதல் 4 முறை நடிகை ராகிணியின் வீட்டிற்கு வந்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சீனிவாஸ் சுப்பிரமணியன் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 13 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா, 1 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 0.5 கிராம் ஹசீஷ் ஆயில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணிக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story