2-வது முறையாக 445 ஊராட்சிகளுக்கு கபசுர குடிநீர் பொடி அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


2-வது முறையாக 445 ஊராட்சிகளுக்கு கபசுர குடிநீர் பொடி அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 21 Sep 2020 3:46 AM GMT (Updated: 21 Sep 2020 3:46 AM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இரண்டாவது முறையாக கபசுர குடிநீர் பொடியை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ துறை மூலமாக மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கபசுர குடிநீர் பொடி பொட்டலங்களை வழங்கி பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஏற்கனவே ஒரு முறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு, அந்தந்த கிராம ஊராட்சி மன்றங்கள் மூலமாக கபசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது. பின்னர் ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் என்ற மாத்திரை வழங்கப்பட்டது.

2-வது முறை

தற்போது 2-வது முறையாக ஊராட்சி தலைவர்கள் மூலமாக கபசுர குடிநீர் பொடி வழங்கப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் தவறாமல் இதனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஊராட்சி உதவி இயக்குனர் விஜயநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story