திருப்பத்தூரில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் சிவன் அருள் தலைமையில் நடந்தது


திருப்பத்தூரில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் சிவன் அருள் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 22 Sep 2020 10:45 PM GMT (Updated: 22 Sep 2020 9:13 PM GMT)

திருப்பத்தூரில் கலெக்டர் சிவன் அருள் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் அலுவலக வளாக கட்டிடம் கூட்டரங்கில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் சிவன் அருள் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், கள்ளத்தனமாக கனிமங்கள் கடத்தப்படும் வாகனங்களை கைப்பற்றுவது குறித்த பதிவேடு இப்பணியில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் பராமரிக்க வேண்டும். கோட்டம் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கள்ளத்தனமாக கனிமங்கள் கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் வழக்குகளை பதிந்து கள்ளத்தனமாக கடத்தும் வாகனம் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டம் மற்றும் வட்ட அளவிலான பணி ஏற்பு குழு முழு மூச்சுடன் செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, சார்ஆட்சியர் அப்துல்முனிர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண் மற்றும் அனைத்து தாசில்தார்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஒன்றிய ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story