வேதாரண்யம் பகுதியில், கடல் சீற்றம்: 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


வேதாரண்யம் பகுதியில், கடல் சீற்றம்: 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 23 Sep 2020 1:00 PM GMT (Updated: 23 Sep 2020 12:50 PM GMT)

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் சூறாவளி காற்று வீசியதால் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம்,

வேதாரண்யம் பகுதியில் கோடியக்கரை, மணியன்தீவு, ஆறுகாட்டுத்துறை, பெரியகுத்தகை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்பட ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான சூறாவளி காற்று வீசியது. பல மணி நேரம் தொடர்ந்து சூறாவளி காற்று வீசியது.

ரோட்டில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காற்றுடன் புழுதியும் பறந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மீனவ கிராம பகுதியில் கடல் சீற்றமும் இருந்தது.

இதனால் அந்த பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்கள் படகுகளை பத்திரமாக ஆங்காங்கே கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் படகுகள், வலைகள் பழுது பார்த்தல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்காங்கே சில மீனவர்கள் கடற்கரை ஓரங்களில் கரைவலை போட்டு மீன் பிடிக்கிறார்கள். குறைந்த அளவு மீன்களே பிடிபடுகிறது.

Next Story