மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது: தனியார் பள்ளி ஆசிரியர் சாவு - மன்னார்குடி அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது: தனியார் பள்ளி ஆசிரியர் சாவு - மன்னார்குடி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 23 Sep 2020 12:45 PM GMT (Updated: 23 Sep 2020 1:30 PM GMT)

மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தனியார் பள்ளி ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டகச்சேரியை சேர்ந்தவர் லெனின் (வயது37). இவர் தனியார் பள்ளி ஆசிரியர். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று இவர் தனது நண்பர் மேலநரிக்குடியை சேர்ந்த மதியரசன் (47) என்பவருடன் மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூருக்கு கூலி வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை லெனின் ஓட்டி சென்றார்.

இவர்கள் மன்னார்குடி -தஞ்சை சாலையில் மேலவாசல் என்ற இடத்தில் சென்றபோது வேதாரண்யத்தில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின் பக்கமாக மோதியது. இதில் லெனின், மதியரசன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லெனின் பரிதாபமாக இறந்தார்.

மதியரசன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மன்னார்குடி போலீசார் லாரி டிரைவர் வேதாரண்யம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த சந்திரபோஸ் (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story