தஞ்சையில் இருந்து தூத்துக்குடிக்கு பொதுவினியோக திட்டத்துக்கு 1,250 டன் புழுங்கல் அரிசி - சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


தஞ்சையில் இருந்து தூத்துக்குடிக்கு பொதுவினியோக திட்டத்துக்கு 1,250 டன் புழுங்கல் அரிசி - சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 23 Sep 2020 2:00 PM GMT (Updated: 23 Sep 2020 1:47 PM GMT)

தஞ்சையில் இருந்து தூத்துக்குடிக்கு பொதுவினியோக திட்டத்துக்கு சரக்கு ரெயிலில் 1,250 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதே போல மதுரைக்கு அரவைக்காக 1,000 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

அதன்படி நேற்று தஞ்சையில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் பொதுவினியோக திட்டத்துக்கு தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக தஞ்சையில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான பிள்ளையார்பட்டி, சென்னம்பட்டி, காவாலிப்பட்டி, இரும்புத்தலை, ஆர்.சுத்திப்பட்டு, புனல்குளம் ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றி வரப்பட்டு, பின்னர் சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதே போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரிகளில் ஏற்றி வரப்பட்ட 1,000 டன் நெல் அரவைக்காக மதுரைக்கு சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story