தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு சாதனை


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு சாதனை
x
தினத்தந்தி 23 Sep 2020 11:00 PM GMT (Updated: 23 Sep 2020 6:59 PM GMT)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு சாதனை படைத்து உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து அமெரிக்கா நியூஆர்லியன்ஸ் துறைமுகத்துக்கு காற்றாலை இறகுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 74.90 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத காற்றாலை இறகுகள் அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக எம்.வி.ஜிங்கோ ஆரோ என்ற கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது.

இந்த கப்பலில் 50 காற்றாலை கோபுரங்கள், 74.30 மீட்டர் நீளம் கொண்ட 33 காற்றாலை இறகுகளும் நவீன பளுதூக்கிகள் மூலம் பாதுகாப்பாக ஏற்றப்பட்டன. அதன்பிறகு இந்த கப்பல் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனால் ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனையை படைத்து உள்ளது.

மேலும் வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறகு மற்றும் அதன் உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு செப்டம்பர் மாதம் வரை 881 காற்றாலை இறகுகளும், 397 காற்றாலை கோபுரங்களும் கையாளப்பட்டு உள்ளன.

கடந்த நிதியாண்டில் 1,667 காற்றாலை இறகுகளும், 648 காற்றாலை கோபுரங்களும் கையாளப்பட்டு உள்ளன. இதன் மூலம் வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறகுகளை ஏற்றுமதி செய்தவற்கான முதன்மை நுழைவு வாயிலாக திகழ்கிறது.

சமீபகாலமாக காற்றாலை மின்உற்பத்தி திறன் அதிகரித்து உள்ளது. காற்றாலை சாதனங்களின் வினியோக சங்கிலியில் இந்தியா ஏற்கனவே கனிசமான முறையில் விரிவாக்கப்பட்டு இருந்தாலும், அதன் முக்கியமான மின்உற்பத்தி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஆத்மநீர்பர் பாரத் என்ற திட்டத்தை உறுதிபடுத்தும் வகையில் வ.உ.சி. துறைமுகத்தில் சுமார் 1,680 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் துறைமுக நிலங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள், குறிப்பாக காற்றாலை எந்திரங்கள் உற்பத்தி செய்யும் போது குறைந்த போக்குவரத்து செலவு மற்றும் தொழில் சிறந்து விளங்குவதற்கான சூழல் அமைந்து இருப்பதால் உற்பத்தி பொருட்களை உலகம் முழுவதும் எளிதில் எடுத்து செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story