சூளகிரி அருகே விவசாயி கொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அடித்து கொன்றது அம்பலம் - மகன் உள்பட 2 பேர் கைது


சூளகிரி அருகே விவசாயி கொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அடித்து கொன்றது அம்பலம் - மகன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2020 10:30 PM GMT (Updated: 23 Sep 2020 10:03 PM GMT)

சூளகிரி அருகே விவசாயி கொலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவருடைய மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காளிங்கவாரம் பக்கமுள்ள சஞ்சீவபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணப்பா என்கிற நாராயணசாமி (வயது 46). விவசாயி. இவர் வழக்கமாக இரவு தனது தோட்டத்தில் காவலுக்கு இருந்து அங்கேயே தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் காலை அவர் மாந்தோப்பில் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த சூளகிரி போலீசார் நாராணயப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது நாராயணசாமியின் மகன் அருண்குமார் (20), அவரது தம்பி பசப்பா மகன் அஜித்குமார் (20), ஆகிய 2 பேரும் நாராயணப்பாவை அடித்துக்கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்ட நாராயணப்பா நிலத்திற்கு வேப்பனப்பள்ளி அடுத்த கரியசந்திரத்தை சேர்ந்த விதவை பெண் ஒருவர் வேலைக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும், நாராயணப்பாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் நாராயணப்பா வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சென்று அடமானம் வைத்து பணத்தை அவர் செலவு செய்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் அருண்குமாரும், தம்பி மகன் அஜித்குமாரும் கட்டை மற்றும் இரும்பு கம்பியால் நாராயணப்பாவை அடித்துக்கொலை செய்ததும், இவர்கள் 2 பேரும் சூளகிரி அருகே உள்ள தனியார் அட்டை கம்பெனியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மகனே தந்தையை அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story