கர்நாடக சட்டசபை கூட்டத்திற்கு ‘கொரோனா பாதித்த அரசு’ என்ற வாசகம் எழுதிய முகக்கவசம் அணிந்து வந்த காங். உறுப்பினர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு


கர்நாடக சட்டசபை கூட்டத்திற்கு ‘கொரோனா பாதித்த அரசு’ என்ற வாசகம் எழுதிய முகக்கவசம் அணிந்து வந்த காங். உறுப்பினர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 23 Sep 2020 10:29 PM GMT (Updated: 23 Sep 2020 10:29 PM GMT)

கர்நாடக சட்டசபை கூட்டத்திற்கு, கொரோனா பாதித்த அரசு என்ற வாசகம் எழுதிய முகக்கவசம் அணிந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. வந்தார். இதற்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் 3-வது நாள் கூட்டம் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியங்க் கார்கேயும் கலந்து கொண்டார். அவர் அணிந்திருந்த முகக்கவசத்தில் சொங்கித சர்க்கரா என்ற வாசகம் கன்னடத்தில் இருந்தது.

அதாவது கொரோனா பாதித்த அரசு என்று எழுதப்பட்டு இருந்தது. இதனால் பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. அணிந்து வந்த முகக்கவசத்திற்கு, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக சபாநாயகர் காகேரியிடம் முறையிட்டனர். இதையடுத்து என்.95 ரக முகக்கவசம் அணியும்படி பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ.வுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார்.

பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ.வுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு 2-வது முறையாக நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இதனால் அவர் கர்நாடக சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மந்திரியான பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும் ஆவார்.

இதுகுறித்து பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படும் இந்த கடினமான காலத்தில் லாபம் ஈட்டுவதில் தான் அரசு அதிக அக்கறை கொண்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் பற்றி கவலைப்படுவதை விட்டு பணம் சம்பாதிப்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர். இதனால் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு என்ற வாசகம் அடங்கிய முகக்கவசம் அணிந்து சட்டசபைக்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story