ஆலங்குடி பெரியகுளத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ஆலங்குடி பெரியகுளத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 24 Sep 2020 1:47 AM GMT (Updated: 24 Sep 2020 1:47 AM GMT)

ஆலங்குடி பெரியகுளத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பெரியகுளம் உள்ளது. ஆலங்குடி மட்டுமின்றி கல்லாலங்குடி, பள்ளத்திவிடுதி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்களுக்கும், விவசாயிகளின் விளை நிலங்களுக்கும் நீராதாரமாக இந்த குளம் விளங்கி வந்தது. அம்புலி என்னும் காட்டாறு செல்லும் வழியில் இந்த குளம் அமைந்து உள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக அம்புலி ஆற்றில் தண்ணீர் வராததால் குளத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து குளம் முழுவதும் படர்ந்து காடுபோல காட்சி அளிக்கிறது.

அதுமட்டுமின்றி அம்புலிஆற்றின் வரத்து வாரியிலும் கருவேல மரங்கள் வளர்த்து நீர்வழித்தடமே தெரியாத அளவுக்கு மறைந்து விட்டது.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் இந்த குளத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி ஆழப்படுத்தினால் பெருமளவு நீரை சேமிக்க இயலும். ஆகவே, இந்த குளத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மதகுகள்

இதேபோல புதுக்கோட்டை விடுதி பகுதியிலிருந்து அம்புலி ஆற்றில் உள்ள சீமை கருவேல மரங்களையும் அகற்றி தூர் வார வேண்டும்.

மேலும், இக்குளத்தில் 8 மதகுகள் உள்ளன. தண்ணீர் இல்லாததை பயன்படுத்தி 2 மதகுகளில் இருந்த இரும்பு கதவுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர் என்று பெரியகுளம் பாசன ஆயக்கட்டுதாரர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story