புதிய கலெக்டர் அலுவலகம் ஆயிரப்பேரியில் அமைக்கக்கோரி - தென்காசியில் கிராம மக்கள் போராட்டம்


புதிய கலெக்டர் அலுவலகம் ஆயிரப்பேரியில் அமைக்கக்கோரி - தென்காசியில் கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Sep 2020 10:00 PM GMT (Updated: 24 Sep 2020 7:10 PM GMT)

தென்காசி புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் ஆயிரப்பேரியில் அமைக்க வேண்டும் என்று கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் கடந்த ஆண்டு உருவானது. இந்த மாவட்டத்தின் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அரசு ரூ.119 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கட்டிடத்தை தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் அரசு விதைப்பண்ணை இருந்த இடத்தில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த இடம் நீர்ப்பிடிப்பு பகுதி என்றும் பொதுமக்கள் எளிதில் வர முடியாது என்றும் கூறி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராம. உதயசூரியன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஆயிரப்பேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அங்குள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள், தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

அவர்கள் புதிய கட்டிடம் ஆயிரப்பேரியில் அமைக்கவேண்டும் என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க.வினர் கூறும் காரணங்கள் பொய்யானவை என்றும் கூறி போராட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்து கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து சென்றனர்.

Next Story