கடையநல்லூர் அருகே மலைவாழ் மக்களுக்கு பசுமை வீடு கட்டும் பணிகள் தொடக்கம் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு


கடையநல்லூர் அருகே மலைவாழ் மக்களுக்கு பசுமை வீடு கட்டும் பணிகள் தொடக்கம் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு
x
தினத்தந்தி 24 Sep 2020 10:45 PM GMT (Updated: 24 Sep 2020 7:17 PM GMT)

கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைப்பகுதியில் மலைவாழ் மக்களுக்கு பசுமை வீடு கட்டும் பணிகள் நேற்று தொடங்கியது. இதனை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு செய்தார்.

அச்சன்புதூர்,

கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணை பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் கலைமான் நகரில் அரசு சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தது. இதையடுத்து மாற்று வீடுகள் கட்டித்தரக்கோரி, மாவட்ட கலெக்டரிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் சேதமடைந்த அனைத்து குடியிருப்புகளையும் இடித்து விட்டு பசுமை வீடு திட்டத்தின் கீழ் 21 வீடுகள் கட்டுவதற்கு கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டார். அதற்கான பணிகள் நேற்று தொடங்கியது.

குடியிருப்பு பகுதிக்கு கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணி, கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சக்திஅனுபமா, வருவாய் ஆய்வாளர் முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புளியங்குடி நகராட்சி கோட்டை மலையாறு பொதுமக்களின் பிரச்சனையை தீர்க்கும் வீதமாக கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் கோட்டைமலையாற்றில் குடியிருக்கும் பழங்குடியினர் குடியிருப்புகளை சீரமைக்கவும், மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்கவும் மற்றும் பழங்குடியினருக்கு தேவையான அடிப்படைவசதிகள் செய்து கொடுக்கவும் உத்திரவிட்டார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் குமார்சிங், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story