காஞ்சீபுரம், திருமழிசையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை


காஞ்சீபுரம், திருமழிசையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை
x
தினத்தந்தி 24 Sep 2020 10:30 PM GMT (Updated: 24 Sep 2020 9:12 PM GMT)

காஞ்சீபுரம், திருமழிசையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம், 

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி வெள்ளம் மற்றும் பேரிடர் அபாயங்களில் இருந்து மீள்வது குறித்து காஞ்சீபுரம் பொன்னேரிக்கரை ஏரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். ஒத்திகையின் போது மழை, வெள்ளம் போன்ற அவசர காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, உயிர் காக்கும் கருவிகளை கொண்டும், படகுகளை கொண்டும் எவ்வாறு காப்பாற்றுவது, முதலுதவி அளிப்பது என்பது உள்ளிட்டவைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி குமார் மற்றும் 60- க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்

திருவள்ளூரை அடுத்த திருமழிசை ஜெகநாத பெருமாள் கோவில் குளத்தில் நேற்று பூந்தமல்லியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தீயணைப்புத்துறை வட மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் ஆணையின்படி நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு உதவி மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமை தாங்கினார். பூந்தமல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் முன்னிலை வகித்தார். இதில் திரளான தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு எதிர்பாராத மழை வெள்ளத்தில் சிக்க நேர்ந்தால் அவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து விளக்கமாக எடுத்து கூறி கோவில் குளத்தில் செயல்முறை விளக்கத்துடன் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

மேலும் அவர்கள் ரப்பர் படகுகள் மூலம் தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்வது குறித்து செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.

Next Story