வடகிழக்கு பருவமழை காலத்தில் மீட்பு உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


வடகிழக்கு பருவமழை காலத்தில் மீட்பு உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 24 Sep 2020 11:03 PM GMT (Updated: 24 Sep 2020 11:03 PM GMT)

வடகிழக்கு பருவமழை காலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் முதல் நிலை மீட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு சார்பில் வடகிழக்கு பருவமழை காலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் முதல் நிலை மீட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழையின்போது, நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளாக 29 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் சப்-கலெக்டர் தலைமையில் பல்துறை அலுவலர்களை கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிட அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் மற்றும் சிறுபாலங்கள், பாலங்கள் தொடர் கண்காணிப்பில் இருந்திட வேண்டும். மீட்பு உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும். மின் வாரிய அலுவலர்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் வயர்களை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்திடவும் வேண்டும். வட கிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04329 228709 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், தாசில்தார்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், முதல் நிலை மீட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story