பெங்களூருவில் கழுத்தை நெரித்து பெண் கொலை வியாபாரிக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூருவில் கழுத்தை நெரித்து பெண் கொலை வியாபாரிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Sep 2020 9:45 PM GMT (Updated: 25 Sep 2020 9:12 PM GMT)

பெங்களூருவில் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவாகி விட்ட வியாபாரியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு வித்யாரண்யபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நரசிபுராவை சேர்ந்தவர் கங்கம்மா(வயது 45). இவர், தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கங்கம்மாவின் வீட்டின் முதல் மாடியில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கங்கம்மா வீட்டில் வாடகைக்கு வசித்ததால், அவருடன் சிவக்குமாருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டு இருந்தது. கங்கம்மாவுக்கு தேவையான உதவிகளையும் சிவக்குமார் செய்து கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 23-ந் தேதி காலையில் கங்கம்மாவின் செல்போனுக்கு, பெங்களூருவில் வசிக்கும் அவரது மகள் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கங்கம்மாவுக்கு பதில் சிவக்குமார் செல்போனை எடுத்து பேசியுள்ளார். அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு சென்றிருப்பதாக மகளிடம் சிவக்குமார் கூறியுள்ளார். அன்றைய தினம் மாலையிலும் தனது தாயை தொடர்பு கொண்டு பேச மகள் முயன்றார். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. சிறிது நேரத்தில் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டது.

இதன் காரணமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரை தொடர்பு கொண்டு கங்கம்மாவின் மகள் பேசினார். அப்போது வீட்டு சாவியை கொடுத்துவிட்டு சிவக்குமார் சென்றுவிட்டதாகவும், கங்கம்மா பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை என்றும் மகளிடம் பக்கத்து வீட்டுக்காரர் கூறியுள்ளார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் தனது தாயை பார்க்க கங்கம்மாவின் மகள் வந்துள்ளார். அப்போது கங்கம்மா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் வித்யாரண்யபுரா போலீசார் விரைந்து சென்று கங்கம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சிவக்குமார் தான் கங்கம்மாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரிந்தது. ஆனால் என்ன காணத்திற்காக கங்கம்மா கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வித்யாரண்யபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சிவக்குமாரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story