பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது


பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 25 Sep 2020 11:15 PM GMT (Updated: 25 Sep 2020 9:32 PM GMT)

பெங்களூருவில் வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வீட்டு உரிமையாளரை போலீசார் தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு பேகூரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லட்சுமி லே-அவுட்டை சேர்ந்தவர் ஆனந்தரெட்டி. இவருக்கு சொந்தமாக ஏராளமான வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். அதுபோல, லட்சுமி லே-அவுட்டில் உள்ள ஒரு வீட்டையும் ஆனந்தரெட்டி, தமிழகத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார். டிரைவரான செல்வம் பெங்களூருவில் கார் ஓட்டி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக தான் வாடகைக்கு வசித்து வந்த வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வம் புறப்பட்டு சென்று விட்டார்.

சமீபத்தில் தான் அவர் பெங்களூருவுக்கு திரும்பி இருந்தார். இதையடுத்து, வீட்டு வாடகையை கொடுக்கும்படி செல்வத்திடம் ஆனந்தரெட்டி கேட்டுள்ளார். மேலும் அவர் வசிக்கும் வீட்டை வேறு ஒரு நபருக்கு குத்தகைக்கு விடவும் ஆனந்தரெட்டி முடிவு செய்திருந்தார். இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல, நேற்று முன்தினம் இரவும் ஆனந்தரெட்டி மற்றும் செல்வம் இடையே வாக்குவாதம் உண்டானது.

இந்த நிலையில், திடீரென்று ஆத்திரமடைந்த ஆனந்தரெட்டி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் செல்வத்தை நோக்கி சரமாரியாக சுட்டதாக தெரிகிறது. இதில், அவரது தோளில் ஒரு குண்டு துளைத்தது. இதனால் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்து ஆனந்தரெட்டி தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்வத்தின் உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்ததும் பேகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது வாடகை பிரச்சினை தொடர்பாக ஆனந்தரெட்டி, செல்வம் இடையே தகராறு ஏற்பட்டதும், அந்த சந்தர்ப்பத்தில் செல்வத்தை அவர் துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட ஆனந்தரெட்டியை போலீசார் தேடிவருகிறார்கள்.

Next Story