போதைப்பொருள் வழக்கு நடிகை ரகுல் பிரீத்சிங்கிடம் 4 மணி நேரம் விசாரணை


போதைப்பொருள் வழக்கு நடிகை ரகுல் பிரீத்சிங்கிடம் 4 மணி நேரம் விசாரணை
x
தினத்தந்தி 25 Sep 2020 11:05 PM GMT (Updated: 25 Sep 2020 11:05 PM GMT)

போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங்கிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து நடந்த விசாரணையில், இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கு, இந்தி திரையுலகிற்கு போதைப்பொருள் கும்பலுடன் உள்ள தொடர்பு என 2 வழக்குகள் பதிவு செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

இதில் சுஷாந்த் சிங்கிற்காக போதைபொருள் வாங்கியது மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக கடந்த 8-ந் தேதி சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.

இதில் விசாரணையின் போது ரியா போதைப்பொருள் வாங்கியது, பயன்படுத்தியது தொடர்பாக சில நடிகைகளின் பெயரை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதில் அவர் பிரபல தமிழ் நடிகை ரகுல் பிரீத்சிங் பெயரையும் பகிரங்கப்படுத்தி உள்ளார்.

இதேபோல நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாசிடமும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைகள் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பிரபல நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பினர்.

இதில் நேற்று நடிகை ரகுல் பிரீத்சிங் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணைக்கு ஆஜரானார். அவர் காலை 10.30 மணியளவில் மும்பை கொலபாவில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் விசாரணை முடிந்த பின் அவர் வீடு திரும்பினார்.

இதற்கிடையே விசாரணையின் போது அவர் போதைப்பொருள் தொடர்பாக ரியாவுடனான வாட்ஸ்அப் உரையாடல்களை ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறிய குற்றச்சாட்டை மறுத்ததாகவும் தெரிகிறது. மேலும் அவர் போதைப்பொருள் கும்பலுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ரகுல் பிரீத்சிங் தமிழில் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே., தேவ், ஸ்பைடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இதேபோல போதைபொருள் தடுப்பு பிரிவினர் நேற்று தயாரிப்பாளர் கிஷிஜித் ரவி, கரிஷ்மா பிரகாஷ் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தினர். மேலும் கிஷிஜித் ரவி வீட்டில் சோதனை போட்டனர். இதுதவிர தொலைக்காட்சி நட்சத்திர தம்பதி ஒருவரின் வீட்டிலும் சோதனை நடத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இன்று (சனிக்கிழமை) பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணைக்கு ஆஜர் ஆவார்கள் என கூறப்படுகிறது.

பிரபல நடிகைகள் மட்டுமின்றி பல இந்திப்பட பிரபலங்களும் போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணை வளையத்திற்குள் வந்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story