தீராத வயிற்று வலியால் விபரீத முடிவு: விஷம் குடித்து 2 வாலிபர்கள் தற்கொலை


தீராத வயிற்று வலியால் விபரீத முடிவு: விஷம் குடித்து 2 வாலிபர்கள் தற்கொலை
x
தினத்தந்தி 26 Sep 2020 11:23 PM GMT (Updated: 26 Sep 2020 11:23 PM GMT)

திருவள்ளூர் அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட 2 வாலிபர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் புளியங்குண்டா கிராமத்தை சேர்ந்தவர் திருபால ரெட்டி. இவரது மகன் மணிவாசன் (வயது 25). கடந்த சில மாதங்களாக மணிவாசனுக்கு தீராத வயிற்று இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் பல மருத்துவமனைக்குசென்று சிகிச்சை பெற்றும் இதுநாள் வரையிலும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை.

இந்த நிலையில், கடந்த 23-ந் தேதி அன்று மீண்டும் மணிவாசனுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் துடிதுடித்த அவர், வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்க பயன்படுத்தும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து திடீரென குடித்தார்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்த அவரை, வீட்டில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிவாசன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதே போல் திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் பங்காருகனப்பளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் கிஷோர் குமார் (24.) கிஷோர் குமார் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கிஷோர் குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.

இதை கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story