போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தவர் மீது வழக்கு


போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Sep 2020 12:24 AM GMT (Updated: 27 Sep 2020 12:24 AM GMT)

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் பல்நோக்கு ஊழியராக பணியாற்றி வருபவர் ஆறுமுகம். இவர் 1991-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அப்போது கொடுத்த சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் அவர் 12.12.1962-ம் ஆண்டு பிறந்ததாகவும், 5-ம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இதுதொடர்பாக புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை ஆய்வு செய்தபோது அவரது உண்மையான பெயர் ஏழுமலை என்பது தெரியவந்தது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புதுறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் ஆறுமுகம் என்பது ஏழுமலையின் மூத்த சகோதரர் என்பதும் அவர் மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றுபவர் என்பதும் தெரியவந்தது. அவரது பெயர் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி ஏழுமலை பணியில் சேர்ந்ததும் அதற்கு அவரது சகோதரரான மீன்வளத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மாரிமுத்து என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக மீன்வளத்துறை இயக்குனர் முத்துமீனா முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாரிமுத்து மற்றும் ஆறுமுகம் ஆகியோர் மீது மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story