வங்கி கடன் வாங்கி தருவதாக மூதாட்டியிடம் தங்க நகை அபேஸ் மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு


வங்கி கடன் வாங்கி தருவதாக மூதாட்டியிடம் தங்க நகை அபேஸ் மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Sep 2020 2:13 PM GMT (Updated: 27 Sep 2020 2:13 PM GMT)

மார்த்தாண்டத்தில் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி, மூதாட்டியிடம் தங்க நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே சிதறால் கன்னாரகுடிவிளையை சேர்ந்த தாம்சன் மனைவி வசந்தா (வயது 62). இவர் சம்பவத்தன்று காலையில் முதியோர் பென்சனை எடுப்பதற்காக மார்த்தாண்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார்.

அங்கு அவர் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். வீட்டுக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக மார்த்தாண்டம்-நாகர்கோவில் சாலையில் நடந்து சென்றார். அவரை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, பின் தொடர்ந்து வந்து வசந்தாவிடம் பேச்சு கொடுத்து, நம்பிக்கையை பெற்றார். அதைத்தொடர்ந்து வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். நான் உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறினார்.

தங்க நகை அபேஸ்

அதை வசந்தா நம்பினார். உடனே அவரிடம் நீங்கள் தங்க நகை அணிந்து இருந்தால் வங்கியில் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே நகையை என்னிடம் கழற்றி கொடுங்கள், வங்கிக்கு சென்று வந்ததும் தருகிறேன் என்று பேசி 1¾ பவுன் நகையை கழற்றி வாங்கி கொண்டு மர்ம ஆசாமி நழுவி சென்று விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுபற்றி வசந்தா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வர ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து வசந்தாவிடம் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி, நகையை அபேஸ் செய்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story