அவினாசி அருகே காருக்கு வழிகேட்டவரின் கையை வெட்டிய 3 பேர் கைது கார்-அரிவாள் பறிமுதல்


அவினாசி அருகே காருக்கு வழிகேட்டவரின் கையை வெட்டிய 3 பேர் கைது கார்-அரிவாள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Sep 2020 4:21 AM GMT (Updated: 28 Sep 2020 4:21 AM GMT)

அவினாசி அருகே காரில் சென்ற போது வழி கேட்டவரின் கையை அரிவாளால் வெட்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவினாசி,

ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச்சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது39) பொக்லைன் டிரைவர். இவர் கடந்த 23-ந்தேதி கோவை மாவட்டம் அன்னூரிலிருந்து ஒரு காரில் தனது நண்பர்கள் முத்துசாமி (49), கார்த்தி (26) ஆகியோருடன் கொடுமுடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அவினாசி பழங்கரை அருகே முன்னே சென்ற காரை முந்திச்செல்ல முயன்றார். அதற்காக வழி விடும்படி தட்சிணாமூர்த்தி தனது கையால் சைகை காட்டி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த காரின் டிரைவர் தட்சிணாமூர்த்தி காரை வழிமறித்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென அந்த காரில் இருந்த 3 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் தட்சிணாமூர்த்தியை பிடித்துக்கொள்ள மற்றொருவர் காரில் வைத்திருந்த அரிவாளை எடுத்து தட்சிணாமூர்த்தியின் கையை வெட்டிவிட்டு 3 பேரும் காரில் தப்பிச்சென்றனர்.

தனிப்படை

உடனே தட்சிணாமூர்த்தி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் தனிப்படை அமைத்து கோவை, ஈரோடு, திருப்பூர், பல்லடம், பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டதில் தப்பிச் சென்ற காரின் அடையாளம் தெரிந்தது.

இதனை தொடர்ந்து நேற்று தெக்கலூர் அருகே அவினாசி போலீஸ்காரர் அண்ணாமலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த கார் அவ்வழியே சென்றதைப் பார்த்து அவினாசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

3 பேர் கைது

உடனே அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் அவினாசியை அடுத்து பழங்கரை அருகே வந்த அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்த 3 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருப்பூர் ராயபுரம் பகுதியை சேர்ந்த மதன் என்ற முகமதுசபி (29) , பல்லடத்தை சேர்ந்த மனோஜ் (30), திருப்பூர் கே.என்.ஆர்.நகரை சேர்ந்த மார்ஜோக் (30) என்பதும் கடந்த 23-ந்தேதி தட்சிணாமூர்த்தியின் கையை வெட்டியது இவர்கள்தான் என்று தெரியவந்தது. எனவே இவர்கள் மீது கொலை செய்ய முயன்றதாக வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கார், அரிவாளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பல்வேறு வழக்குகள்

இதுகுறித்து போலீசார் கூறுகையில் மதன் மீது ஆள்கடத்தல், அடித்து பணம் பறிப்பது, அடிதடி, போன்ற 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் திருப்பூர், கோவை, மதுரை ஆகிய ஊர்களில் நிலுவையில் உள்ளது. இதேபோல் மனோஜ் மீது 6 வழக்குகள் உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்த கார்த்தி (30) என்பவரை பணத்திற்காக கருமத்தம்பட்டி அருகே காரில் இவர்கள் கடத்தியுள்ளனர். ஆட்களை மிரட்டுவதற்காக திருநெல்வேலியில் இருந்து ரூ.4ஆயிரம் கொடுத்து அரிவாளை வாங்கி வைத்துள்ளனர். மார்ஜோக் தனது நண்பரிடம் தினசரி ரூ.1,300 வாடகைக்கு காரை எடுத்து மதனிடம் ஒப்படைத்துள்ளார் என்று கூறினர்.

Next Story