மாணவர், பெற்றோர் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கல்வித்துறை சார்பில் நாளை கட்டுப்பாட்டு அறை திறப்பு


மாணவர், பெற்றோர் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கல்வித்துறை சார்பில் நாளை கட்டுப்பாட்டு அறை திறப்பு
x
தினத்தந்தி 29 Sep 2020 11:20 PM GMT (Updated: 29 Sep 2020 11:20 PM GMT)

மாணவர், பெற்றோர் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கல்வித்துறை சார்பில் நாளை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக மாநிலத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் பாதிப்பு விகிதம் 10 சதவீதமாக குறைந்துள்ளது.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ, கொரோனா பரிசோதனை மையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைகளுக்கோ சென்று பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்து மற்றும் உபகரணங்கள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அங்கன்வாடி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக சுகாதாரத்துறை சார்பிலும், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி சார்பிலும் தனித்தனி நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டு அறை

புதுவை கல்வித்துறை சார்பில் மாணவர்கள் நலனுக்காக தனி கட்டுப்பாட்டு அறை நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் மாணவர்கள், பெற்றோர் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story