கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் பெண்களிடம் நகை பறித்துச் சென்ற 2 வாலிபர்கள் கைது


கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் பெண்களிடம் நகை பறித்துச் சென்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 30 Sep 2020 12:36 AM GMT (Updated: 30 Sep 2020 12:36 AM GMT)

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் பெண்களிடம் நகை பறித்துச் சென்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் கட்டாலங்குளம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சவரியப்பன் மனைவி ரீட்டா. இவர் நேற்று தனது நிலத்தில் விவசாய பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் ரீட்டா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் கயத்தாறு-கடம்பூர் சாலையில் தெற்கு மயிலோடையை சேர்ந்த உடையார்பாண்டி மனைவி மகேஷ்வரி தனது இருசக்கர வாகனத்தில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், மகேஷ்வரி இருசக்கர வாகனத்தின் மீது இடிப்பது போன்று சென்றுள்ளனர். இதில் நிலைதடுமாறி மகேஷ்வரி சாலையில் தவறி விழுந்தார். அப்போது அந்த மர்மநபர்கள் மகேஷ்வரிக்கு உதவி செய்வது போல நடித்து, அவர் கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து மகேஷ்வரி கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

வாகன சோதனை

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்களை தொடர்ந்து போலீசார் உஷாரானார்கள். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் மகேஷ்வரியிடம் நகை பறித்து செல்லும் போது, அப்பகுதியில் இருந்த சிலர் மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். அப்பகுதியில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிள் நம்பரை பார்த்து, போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் மர்ம நபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி நோக்கி செல்வதாக தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் ஆலோசனையின் பேரில் நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையிலும், சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி தலைமையிலும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டு, மர்ம நபர்களை கைது செய்ய வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

சுற்றி வளைத்தனர்

இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையிலான தனிப்படையினர் நாலாட்டின்புதூர் முக்கு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 போ போலீசாரை பார்த்ததும், அங்கிருந்த பாலம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடினர். இதனை பார்த்த போலீசார் 2 பேரையும் விரட்டிச்சென்று, சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், 2 பேரும் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழவளைவைச் சேர்ந்த அய்யனார் (வயது 28), சூர்யா (20) என்பது தெரியவந்தது. மேலும் கட்டாலங்குளம், கயத்தாறில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, 11 பவுன் தங்க நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் பாராட்டினர்.

Next Story