சிதம்பரம் அருகே முதலை இழுத்து சென்ற விவசாயி பிணமாக மீட்பு


சிதம்பரம் அருகே முதலை இழுத்து சென்ற விவசாயி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 30 Sep 2020 1:31 AM GMT (Updated: 30 Sep 2020 1:31 AM GMT)

சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் முதலை இழுத்து சென்ற விவசாயி பிணமாக மீட்கப்பட்டார்.

அண்ணாமலைநகர்,

சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூரை சேர்ந்தவர் அறிவானந்தம் (வயது 53), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த ராட்சத முதலை ஒன்று, குளித்துக் கொண்டிருந்த அறிவானந்தத்தின் காலை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. இது குறித்த தகவலின் பேரில் சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீருக்குள் இறங்கி, முதலை இழுத்து சென்ற அறிவானந்தத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரவு நீண்ட நேரம் ஆனதாலும், பலத்த மழை பெய்ததாலும் அறிவானந்தத்தை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சிதம்பரம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சேஷசயணன் தலைமையிலான வீரர்கள் மற்றும் கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றில் படகுகளில் சென்று தேடும் பணியை தொடங்கினர். அப்போது கீழக்குண்டலப்பாடி பழைய கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டுமான பணிகள் நடந்து வரும் பகுதியில் உள்ள மணல் திட்டில் அறிவானந்தம் பிணமாக கிடந்தார். அவரின் உடல் மீது முதலை கிடந்தது.

இதை கண்டு தீயணைப்பு துறையினர் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், அந்த முதலையை அங்கிருந்து விரட்டிவிட்டு அறிவானந்தத்தின் உடலை மீட்டனர். முதலை கடித்ததில் அவரின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்தன. இதையடுத்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், அண்ணாமலை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறிவானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காவிரியின் வடிகாலான கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு காலத்தில் மேட்டூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து முதலைகள் அடித்து வரப்படுகிறது.

அவ்வாறு வரும் முதலைகள் சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் கிடப்பதால் இங்கேயே தங்கி விடுகிறது. இந்த முதலைகள் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பலரை கடித்து கொன்றுள்ளது. மேலும் ஆடு, மாடுகளையும் கொன்று சாப்பிட்டுள்ளது. இதனால் பழைய கொள்ளிடம் கரையை யொட்டி உள்ள வேளக்குடி, வல்லம்படுகை, அகரநல்லூர் உள்பட பலவேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பிடிபடும் முதலைகளை வனத்துறையினர் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குளத்தில் கொண்டு சென்று விடுகின்றனர். ஆனால் அங்கிருந்து முதலைகள் எளிதாக வெளியேறி விடுகிறது. எனவே இது போல் நடைபெறாமல் இருக்க சிதம்பரம் அருகே முதலை பண்ணை அமைக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் பிடிபடும் முதலைகளை அந்த பண்ணையில் விட்டு பாதுகாக்க வேண்டும் என்றனர்.

இதனிடையே முதலை கடித்து இறந்த அறிவானந்தத்தின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக மனித விலங்கு மோதல் நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்தை மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் வழங்கினார். அவருடன் சிதம்பரம் வனசரகர் அலுவலர் செந்தில்குமார், வனவர் அஜிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் முதலை கடித்து இறந்த அறிவானந்தத்தின் குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறி ரூ. 20 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். அப்போது ஒன்றிய செயலாளர் வை.சுந்தரமூர்த்தி, முன்னாள் சிதம்பரம் நகர செயலாளர் தோப்பு கே.சுந்தர், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story