லாஸ்பேட்டையில் கத்தியை காட்டி மிரட்டி அடுத்தடுத்து 2 பெண்களிடம் தாலி சங்கிலி பறிப்பு


லாஸ்பேட்டையில் கத்தியை காட்டி மிரட்டி அடுத்தடுத்து 2 பெண்களிடம் தாலி சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 30 Sep 2020 10:31 PM GMT (Updated: 30 Sep 2020 10:31 PM GMT)

லாஸ்பேட்டையில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தாலி சங்கிலியை பறித்துச் சென்ற முகமூடி கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார் (வயது 40). அரசு ஊழியர். இவரது மனைவி செண் பகவள்ளி (36). இவர்கள் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். லாஸ்பேட்டை ராஜீவ்காந்தி நகர் மெயின்ரோட்டில் இருட்டு பகுதியில் வந்த போது பின்னால் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென ராஜ்குமாரை வழிமறித்தனர்.

இதனால் பயந்து போன அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் கத்தியை காட்டி கழுத்தில் கிடக்கும் நகைகளை கழற்றி கொடுக்குமாறு செண்பகவள்ளியை மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வேறு வழியின்றி தனது கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி சங்கிலியை கழற்றி கொடுத்தார். அதை பறித்துக் கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் மற்றொரு நகை பறிப்பு சம்பவமும் நடந்துள்ளது. அதாவது, லாஸ்பேட்டை மடுவுபேட் பகுதியை சேர்ந்த சதீஷ் (30) தனது மனைவி நந்தினியுடன் நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்றார். பெசண்ட் நகர் அரவிந்தர் வீதியில் இருட்டான பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் திடீரென வழி மறித்து நிறுத்தினர்.

நந்தினியிடம் கழுத்தில் கிடந்த சங்கிலியை கழற்றி தருமாறு கேட்டு கத்தி முனையில் மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் 5 பவுன் தாலி சங்கிலியை கழற்றி கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ஒரே கும்பல்

இதுகுறித்து நகை பறி கொடுத்த இருதரப்பினரும் தனித்தனியாக புகார் செய்ததன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தம்பதிகளாக மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களை வழிமறித்து வெவ்வேறு இடங்களில் கைவரிசை காட்டியவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் தான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து வழிப்பறி சம்பவங்கள் நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஒரேநாளில் 2 பெண்களிடம் அடுத்தடுத்து தாலி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் லாஸ்பேட்டை பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் இரவு நேர கூடுதல் ரோந்து பணியை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story