மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மையத்தில் கலெக்டர் ஆய்வு


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Oct 2020 10:30 AM GMT (Updated: 4 Oct 2020 10:13 AM GMT)

ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு நடத்தினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மையம் இரட்டை பூட்டு முறையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நிலை குறித்தும் தணிக்கை செய்ய அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வீரராகவ ராவ் ராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் நேரில் சென்று தணிக்கை மேற்கொண்டார்.

பாதுகாப்பு மையத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீல், சிசிடிவி கேமரா செயல்பாடு, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் பதிவேடு, தீயணைப்பு கருவியின் காலாவதி நாள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வுப்பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.அதை தொடர்ந்து கலெக்டர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக பொதுப்பணித் துறையின் மூலம் ரூ.2.92 கோடி மதிப்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிட்டங்கியின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டுமானப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 100 சதவீதம் நிறைவேற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன் உட்பட தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story