நாட்டிலேயே முதல் முறையாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஓரினச்சேர்க்கையாளர் அணி தொடக்கம்


நாட்டிலேயே முதல் முறையாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஓரினச்சேர்க்கையாளர் அணி தொடக்கம்
x
தினத்தந்தி 5 Oct 2020 9:18 PM GMT (Updated: 5 Oct 2020 9:18 PM GMT)

நாட்டிலேயே முதன் முறையாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஓரினச்சேர்க்கையாளர் அணி தொடங்கப்பட்டு உள்ளது.

மும்பை,

அரசியல் கட்சியில் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, விவசாய அணி, வர்த்தகர் அணி என்றெல்லாம் பல்வேறு அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் நாட்டிலேயே முதல் முறையாக ஓரினச்சேர்க்கையாளர் அணி என்ற புதிய பிரிவை முன்னாள் மத்திய மந்திரி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய அணியின் தொடக்க விழா நேற்று மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் மாநில தலைவரும், மாநில நீர்வளத்துறை மந்திரியுமான ஜெயந்த் பாட்டீல் இந்த அணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், “நாட்டிலேயே இளம்பெண்கள் அணியை எங்களது கட்சி தான் தொடங்கி இருந்தது. தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் போன்றோருக்கு சமூக நீதியை பெற்றுத்தரும் நோக்கில் இந்த அணியை தொடங்கி உள்ளோம்” என்றார்.

13 பேர் கொண்ட நிர்வாக குழு

ஓரினச்சேர்க்கையாளர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள பிரியா பாட்டீல் கூறுகையில், குறிப்பிட்ட இந்த சமுதாயத்தினரின் உரிமைகளை எனது தலைமையில் செயல்படும் அணி உறுதிப்படுத்தும், என்றார்.

இந்த விழாவில் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேயும் கலந்து கொண்டார்.

ஓரினச்சேர்க்கையாளர் அணிக்கு 13 பேர் கொண்ட நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story