கார்கலாவில் சம்பவம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த கொரோனா பாதித்த புகைப்பட கலைஞர்


கார்கலாவில் சம்பவம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த கொரோனா பாதித்த புகைப்பட கலைஞர்
x
தினத்தந்தி 5 Oct 2020 9:34 PM GMT (Updated: 5 Oct 2020 9:34 PM GMT)

கார்கலாவில் கொரோனா பாதித்த புகைப்பட கலைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை எடுக்க சமூக ஆர்வலர் ஒருவர் 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்து மீட்ட சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

கொரோனா பலரது வாழ்க்கையை சின்னாபின்னாமாக்கிவிட்டது. கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் உடல்களை மத்திய அரசு வழிகாட்டுதல் படி குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் சுகாதாரத் துறையினரே அடக்கம் அல்லது தகனம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மரண பீதியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

உடுப்பி மாவட்டம் கார்கலா டவுனை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 45). புகைப்பட கலைஞரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதைதொடர்ந்து அவர் தனது வீட்டில் இருந்தபடியே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் கொரோனாவால் மரணம் அடைந்துவிடுவோமோ என அவர் பீதியில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை பிரசன்னா, தனது வீட்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

சமூக ஆர்வலர் மீட்டார்

இதுகுறித்து அவரது குடும்பத்தினர், கார்கலா போலீசாருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் கொரோனா பாதித்த பிரசன்னா தற்கொலை செய்து கொண்டதால் அவரது உடலை எடுக்க தீயணைப்பு துறையினரும், சுகாதாரத் துறையினரும் பீதி அடைந்தனர். இதனால் அவரது உடல் கிணற்றிலேயே கிடந்தது.

பின்னர் கார்கலா தாசில்தார் புரந்தர ஹெக்டே, நேற்று முன்தினம் காலை மங்களூரு அருகே முல்கியில் மனநல காப்பகம் நடத்தி வரும் சமூக ஆர்வலரான ஆசிப் ஆபத்பாந்தவா என்பவரை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி கூறினார். அதைதொடர்ந்து அவர் கார்கலாவுக்கு விரைந்து வந்தார். 90 கிலோ மீட்டர் தூரம் அவர் தனது குழுவினருடன் வந்தார். பின்னர் முழு பாதுகாப்பு கவச உடை, முகக்கவசம் அணிந்து தீயணைப்பு வீரர்கள், தனது குழுவினர் உதவியுடன் கிணற்றில் இறங்கி, 15 நிமிட போராட்டத்திற்கு பிறகு தற்கொலை செய்த பிரசன்னாவின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தார். அதைதொடர்ந்து சுகாதாரத் துறையினர், பிரசன்னாவின் உடலை மத்திய அரசின் வழிகாட்டுதல் படி அடக்கம் செய்தனர்.

பாராட்டுகள்

இதற்கிடையே பிரசன்னா உடலை மீட்ட ஆசிப்பிற்கு, பிரசன்னாவின் குடும்பத்தினர் நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளனர். ஆனால் அந்த நிதி உதவியை வாங்க மறுத்த ஆசிப், மனித நேய அடிப்படையில் கொரோனா பாதித்து இறந்த பிரசன்னாவின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு கொடுத்துள்ளேன். இதற்கு எனக்கு பணம் தர வேண்டாம். இது மனிதேநய சம்பவம் என்று கூறி அங்கிருந்து தனது குழுவினருடன் புறப்பட்டு சென்றுவிட்டார்.

கொரோனாவால் தற்கொலை செய்தவரின் உடலை எடுக்க குடும்பத்தினரும், உறவினர்களும் முன்வராத நிலையில் மனிதநேய அடிப்படையில் உதவிய ஆசிப்புக்கு அந்தப் பகுதி பொதுமக்களும், அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Next Story