ஆவடி அருகே படுக்கையில் தீப்பிடித்து முதியவர் உடல் கருகி சாவு


ஆவடி அருகே படுக்கையில் தீப்பிடித்து முதியவர் உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 6 Oct 2020 11:00 PM GMT (Updated: 6 Oct 2020 11:00 PM GMT)

ஆவடி அருகே படுக்கையில் தீப்பிடித்து முதியவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

ஆவடி,

ஆவடி அடுத்த திருநின்றவூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 80). இவர் வீட்டின் இரண்டாவது மாடியில் தனியாக ஒரு அறையில் வசித்து வந்தார். தொடர்ச்சியாக புகைபிடிக்கும் பழக்கத்தை உடைய அவர் உடல் நலக்குறைவு காரணமாக தற்பொழுது தனியாக எழுந்து நடக்க முடியாமல் வீட்டில் உள்ள அந்த அறையில் படுக்கையிலேயே படுத்து இருந்தார். கடந்த 6 ஆண்டுகளாக இவருக்கு அவரது 3 மகன்கள் உணவளித்து அவரை கவனித்து வந்தனர். அன்றாடம் அவர் இருக்கும் இடத்திற்கு அவர்கள் உணவை கொண்டு சென்று கொடுத்து விட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு உணவு கொடுத்து விட்டு வந்து படுத்து கொண்டனர். வழக்கம்போல் நேற்று காலை அவருக்கு உணவு கொடுப்பதற்காக அவரது மகன் சென்றபோது கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

உடல் கருகி சாவு

கதவை திறக்க முடியாததால் உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் படுத்து கொண்டிருந்த படுக்கையுடன் தீப்பிடித்து எரிந்து உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருநின்றவூர் போலீசார் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கும்போது தொடர்ச்சியான புகைப்பிடிக்கும் பழக்கம் பாலகிருஷ்ணனுக்கு இருந்ததால் அவர் புகைப்பிடித்து கொண்டிருக்கும் போதே ஒருவேளை நெஞ்சுவலி காரணமாக இறந்திருக்கலாம் அந்த சிகரெட்டை அணைக்க முடியாமல் அது அப்படியே படுக்கையில் விழுந்து அதன்மூலம் மெத்தை தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story