ஈரோட்டில் பரிதாபம்: ஓடையில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி


ஈரோட்டில் பரிதாபம்: ஓடையில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 7 Oct 2020 12:15 AM GMT (Updated: 7 Oct 2020 12:15 AM GMT)

ஈரோட்டில் ஓடையில் மூழ்கி 8 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

ஈரோடு,

ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 33). மெக்கானிக். இவருடைய மனைவி ஸ்ரீமா (30). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு கிஷோர் (10), சந்தோஷ் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் சந்தோஷ் 2-ம் வகுப்பும் படித்து வந்தான்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த குப்பைகளை கொட்டுவதற்காக கிஷோரும், சந்தோசும் அந்த பகுதியில் செல்லும் பெரும்பள்ளம் ஓடைக்கு சென்றனர்.

அப்போது ஓடையின் கரையில் குப்பைகளை கொட்டிய அவர்கள் குப்பை கொண்டு வந்த டப்பாவை கழுவுவதற்காக தண்ணீரில் இறங்கினார்கள். சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி ஓடையில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அந்த தண்ணீரில் அவர்கள் டப்பாவை கழுவி கொண்டு இருந்தனர்.

ஓடையில் மூழ்கி பலி

சந்தோஷ் எதிர்பாராதவிதமாக திடீரென தடுமாறி ஓடையில் விழுந்தான். அப்போது கிஷோர் அவனை பிடித்து இழுக்க முயன்றான்.

ஆனால் தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்ட சந்தோஷ் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த கிஷோர் சத்தம் போட்டான். அதைக்கேட்டு அவனது பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அங்கு ஓடோடி சென்றனர்.

அவர்கள் ஓடையில் மூழ்கிய சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சந்தோஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓடையில் மூழ்கி இறந்த சிறுவனின் உடலை பார்த்து அவனது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Next Story