பெருமாநல்லூர் அருகே கேரளாவிற்கு மாடுகளை ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்


பெருமாநல்லூர் அருகே கேரளாவிற்கு மாடுகளை ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Oct 2020 12:00 PM GMT (Updated: 7 Oct 2020 12:00 PM GMT)

பெருமாநல்லூர் அருகே கேரளாவிற்கு மாடுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெருமாநல்லூர்,

வடமாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக கேரள மாநிலத்திற்கு எருமை மாடுகளை ஏற்றிக்கொண்டு, 2 லாரிகள் காளிபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக காரில் சென்ற சிவசேனா கட்சியை சேர்ந்த மாநில இளைஞரணி துணைத்தலைவர் திருமுருகதினேஷ் தலைமையாலான நிர்வாகிகள் அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திராவிலிருந்து 29 எருமைமாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரியும், அரியானாவில் இருந்து 38 எருமைமாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரியும் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து மாடுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டிரைவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திர மாநிலத்திலிருந்து 29 எருமைமாடுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் டிரைவர் மல்லையா (வயது 29) என்பதும், அரியானாவிலிருந்து 38 எருமை மாடுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் டிரைவர் முகம்மது அசன் (48) என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து டிரைவர்கள் மல்லையா மற்றும் முகம்மது அசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் பிடிபட்ட 67 எருமை மாடுகளையும் விஜயமங்களத்தில் உள்ள கோசாலைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

Next Story