அவினாசி அருகே பாழடைந்து கிடக்கும் வேணுகோபாலசுவாமி கோவில் புதுப்பிக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு


அவினாசி அருகே பாழடைந்து கிடக்கும் வேணுகோபாலசுவாமி கோவில் புதுப்பிக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 12:06 PM GMT (Updated: 7 Oct 2020 12:06 PM GMT)

அவினாசி அருகே அழகிய சிற்ப கலைநயத்தோடு வடிவமைக்கப்பட்டு தற்போது பாழடைந்து கிடக்கும் வேணுகோபால சுவாமி கோவிலை புதுப்பிக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அவினாசி,

அவினாசி ஒன்றியத்திற்குட்பட்ட கருவலூரில் ராமநாதபுரம் செல்லும் ரோட்டில் நல்லாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது வேணுகோபாலசுவாமி கோவில். இக்கோவில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். நுழைவாயிலின் முகப்பில் கருட கம்பம், கருடன் மற்றும் ஆஞ்சநேயர் படைப்பு சிற்பங்களோடு பக்தர்களை வரவேற்கிறது.

இதையடுத்து ஒரு பெரிய மண்டபம் அதில் அழகான சிற்பங்கள், உணவை கொத்தி உண்ணும் அழகிய கிளிகளின் சிற்பங்களை கொண்ட தோரணம் போன்ற வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. கலையின் முக்கிய அம்சமாக விளங்கும் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட வெண்மை நிற தூண்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலத்தின் கோலம் இவ்வளவு அழகிய கலைநயத்துடன் கூடிய சிறப்பு வாய்ந்த அழகிய சிற்பங்கள் சிறகொடிந்த கிளியை போல உருக்குலைந்து கிடக்கிறது.

மண்டபத்தின் வடபுறம் பள்ளியறை. இந்த மண்டபத்தில் இருந்து நல்லாற்றின் தென்கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சுரங்கம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இக்கோவிலை சுற்றிலும் விவசாய நிலங்களில் நிலவறைகள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மண்டபத்தின் சுவர்களில் 2 கருங்கல் வரிசைகளாலான சுவர்களுக்கிடையில் சந்திரனை என்று அழைக்கப்படும் மண், மணல், சுண்ணாம்புகல் கலந்த கலவையால் நிரப்பி கட்டப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம் மற்றும் கருவறை தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டுமானத்தின் அமைப்பு உறுதிப்படுத்தப்பட இயலவில்லை.

ஆனால் அளவில் சிறிது குறைந்து இருப்பது இடிபாடுகளுடன் கூடிய மண்டபங்களை பார்க்கும்போது உணர இயலும். அர்த்தமண்டபம் மற்றும் கருவறையை சுற்றியுள்ள சுவர்களின் கீழ்புரத்தில் கல்வெட்டுகள் இருந்ததாக தெரிகிறது. தற்போது அவை எதுவும் இங்கு காணவில்லை. கர்ப்பக்கிரகத்தில் பசுவுடன் கூடிய ராதா ருக்குமணி சமேத வேணுகோபாலசுவாமி சொரூபம் இருந்ததாக சொல்கிறார்கள். இதுகுறித்து விசாரித்தபோது 1970--ம் ஆண்டுக்கு பிறகு இங்குள்ள சிலைகள் காணாமல் போனதாக தெரிவித்தனர்.

அதேபோல் இங்கிருந்த துவாரபாலகர் சிலைகள் தற்போது கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இங்கிருந்த பள்ளி அறையின் பின்னால் சொர்க்கவாசலை நோக்கியவாறு ஒரு பிருந்தாவனம் இருந்துள்ளது. கோவிலின் மேற்கு பக்க சுவரையொட்டி தென்புறம் மற்றும் வடபுற மூலையில் 2 சன்னிதிகளில் லட்சுமி, மற்றும் ஆஞ்சநேயர் சிலைகள் இருந்ததாக கூறுகின்றனர்.

இப்போது அந்த சிலைகள் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இவை யாவும் தற்போது சிதிலமடைந்து உருக்குலைந்து போனது. பழங்காலத்தில் ராமநாதபுரம் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. நில ஆவணங்கள் சிலவும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. வேணுகோபாலசுவாமி கோவில் மற்றும் இங்கு வாழ்ந்த, வாழும் மக்கள் குழுக்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 12 மற்றும் 13-ம் நூற்றாண்டில் ராமநாதபுரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

காணாமல் போன மூலவர் சிலையை கண்டுபிடிப்பதுடன், சிதிலமடைந்து குட்டிச்சுவர் போல் கவனிப்பாரற்று கிடக்கும் வேணுகோபால சுவாமி கோவிலை அதன் பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் ஆன்மிக வாதிகளின் விருப்பமாக உள்ளது.

Next Story