உறுதித்தன்மை கண்டறிய பாம்பன் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்ட சென்சார் பழுது சரி செய்யும் பணி தீவிரம்


உறுதித்தன்மை கண்டறிய பாம்பன் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்ட சென்சார் பழுது சரி செய்யும் பணி தீவிரம்
x

உறுதித்தன்மை கண்டறிய பாம்பன் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்ட சென்சார் பழுதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் தூக்குப்பாலத்தில் கடந்த 2-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து சென்னை புறப்பட்டு சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும்போது சென்சார் பொருத்தப்பட்டுள்ள ஒரு இடத்தில் இருந்து சத்தம் வந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே பொறியாளர்கள் குழுவினர் தீவிரமாக ஆய்வு நடத்தி வந்தனர். இதனால் தற்காலிகமாக ராமேசுவரத்தில் இருந்து தினமும் சென்னைக்கு செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 3 நாட்களாக மண்டபம் ரெயில்வே நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

இந்தநிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு குறித்து ஆய்வு நடத்துவதற்காக நேற்று சென்னையிலிருந்து ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுனர் ஜஸ்டின் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்திற்கு வந்தனர். அந்த குழுவினர் தூக்குப்பாலத்தில் ரெயில் செல்லும்போது சத்தம் வந்த சென்சார் பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சில இடங்களில் உள்ள சென்சார் கேபிள் பழுதாகி உள்ளதும், அதனாலேயே ரெயில் செல்லும் போது சத்தம் வந்துள்ளது தெரியவந்தது.

இதைதொடர்ந்து சேதமான சென்சார் கேபிளை அகற்றி புதிய கேபிள் அமைக்கும் பணி நடந்தது. மேலும் ஒரு சில இடங்களில் புதிதாக சென்சார் பொருத்தும் பணியிலும் ஐ.ஐ.டி. குழுவினர் ஈடுபட்டனர்.

இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. தூக்குப்பாலத்தில் உறுதித்தன்மை குறித்து கண்டறிவதற்காக பொருத்தப்பட்டுள்ள சென்சாரில் பழுது ஏற்பட்டுள்ளது. அந்த பழுதான சென்சாரை அகற்றி புதிய சென்சார் பொருத்தும் பணியில் ஐ.ஐ.டி. குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிந்த பிறகு விரைவில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலம் வழியாக வழக்கம்போல் ரெயில் இயக்கப்படும் என்றார்.

Next Story