மேலூர் அருகே எலி மருந்து தடவிய முட்டையை கொடுத்து 2 வயது குழந்தை கொலை - தந்தை மீது தாய் பரபரப்பு புகார்


மேலூர் அருகே எலி மருந்து தடவிய முட்டையை கொடுத்து 2 வயது குழந்தை கொலை - தந்தை மீது தாய் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 7 Oct 2020 1:20 PM GMT (Updated: 7 Oct 2020 1:20 PM GMT)

எலிமருந்து தடவிய முட்டையை கொடுத்து குழந்தையை கொன்று விட்டதாக குழந்தையின் தந்தை மீது தாய் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

மேலூர்,

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் சத்யபிரபு (வயது 27). இவரது மனைவி நிவேதா (23). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆராதனா (2) என்ற பெண் குழந்தை இருந்தது.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தை ஆராதனாவை கணவரிடம் விட்டுவிட்டு நிவேதா தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் எலிமருந்தை சாப்பிட்டு விட்டதாக மேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை ஆராதனாவை அவரது தந்தை சத்யபிரபு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். அதன்பிறகு குழந்தை ஆராதனா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டாள். அங்கு அவள் பரிதாபமாக இறந்து போனாள்.

இந்த நிலையில் எலிமருந்து தடவிய முட்டையை குழந்தைக்கு சாப்பிட கொடுத்து விட்டதாக கணவர் சத்யபிரபு மற்றும் கணவரின் உறவினர்கள் சிவகங்கை மாவட்டம் நாமனூர் கருத்தன்பட்டியை சேர்ந்த வசந்தி, கருப்பையா ஆகியோர் மீது நிவேதா கீழவளவு போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து சத்யபிரபு, வசந்தி, கருப்பையா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story