திருமணத்துக்கு பெற்றோர் திடீர் எதிர்ப்பு: நிச்சயித்த வாலிபருடன் இளம்பெண் ஓட்டம் போலீசில் தந்தை புகார்


திருமணத்துக்கு பெற்றோர் திடீர் எதிர்ப்பு: நிச்சயித்த வாலிபருடன் இளம்பெண் ஓட்டம் போலீசில் தந்தை புகார்
x
தினத்தந்தி 7 Oct 2020 2:35 PM GMT (Updated: 7 Oct 2020 2:35 PM GMT)

திருமணத்துக்கு பெற்றோர் திடீரென எதிர்ப்பு தெரிவித்ததால் நிச்சயித்த வாலிபருடன் இளம்பெண் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

போத்தனூர்,

கோவை குனியமுத்தூரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் பேசி முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால் அந்த இளம்பெண் வாலிபருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார்.

இதற்கிடையே அந்த வாலிபரின் நடவடிக்கைகள் இளம்பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்க வில்லை என்று தெரிகிறது. உடனே அவர்கள் நிச்சயித்த வாலிபருக்கு தங்களின் மகளை திருமணம் செய்து வைக்க திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களின் மகளிடம் அந்த வாலிபருடன் செல்போனில் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்த வேண்டும் என்று கூறி கண்டித்து உள்ளனர்.

ஆனாலும் அந்த பெண், வாலிபருடன் தொடர்ந்து பேசி வந்ததால் அவர்கள் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் கூறியதை அந்த இளம்பெண் ஏற்க மறுத்துள்ளார். இது அவருடைய பெற்றோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தன்னை பெற்றோர் கண்டிப்பது குறித்து அந்த இளம்பெண், வாலிபரிடம் கூறினார்.

இதையடுத்து அந்த இளம்பெண், நேற்று முன்தினம் திடீரென்று வீட்டில் இருந்து மாயமானார். அவரை பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அந்த இளம்பெண் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட வாலிபருடன் சென்றது தெரியவந்தது. இது குறித்து இளம்பெண்ணின் தந்தை, வாலிபருடன் ஓட்டம் பிடித்த தனது மகளை கண்டுபிடித்து மீட்டு தர வேண்டும் என்று கோரி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இளம்பெண்ணையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story