உடையார்பாளையம் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி


உடையார்பாளையம் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 7 Oct 2020 3:51 PM GMT (Updated: 7 Oct 2020 3:51 PM GMT)

உடையார்பாளையம் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார், ஏந்தல்- கல்லாங்குளம் செல்லும் சாலை அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலையில் நாள் தோறும் 500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதி பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கான மூலப்பொருட்களை இந்த சாலை வழியாக கொண்டு செல்லும்போது மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்குகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தடுமாறி விழுந்து படுகாயமடைந்து செல்லும் நிலை உள்ளது.

பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவமனை செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் என அனைவரும் குண்டும், குழியுமான சாலையில் செல்லும் போது சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story