விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பிகள் மாற்றியமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பிகள் மாற்றியமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Oct 2020 4:07 PM GMT (Updated: 7 Oct 2020 4:07 PM GMT)

கரூர்-வாங்கல் சாலையில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பிகளை மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்,

கரூரில் இருந்து வாங்கல் செல்லும் சாலை போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய சாலை ஆகும். இந்த சாலை மிகவும் குறுகலாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் கரூரில் இருந்து வாங்கல் செல்லும் சாலையை 11.4 கிலோ மீட்டருக்கு அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியது. இப்பணிகள் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது சாலையை அகலப்படுத்தும் பணி சில கிலோமீட்டர் தூரம் வரை முடிந்து உள்ளது. கரூர் நகராட்சி குப்பை கிடங்கு உள்ள சாலை பகுதியில் பணிகள் முடிந்ததால் பொதுமக்கள் இச்சாலையில் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் சாலையை ஒட்டியுள்ள குப்பை கிடங்கு அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பிகள் தற்போது அகலப்படுத்தப்படும் சாலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி மட்டும் சாலையை அகலப்படுத்தாமல், மின்கம்பி உள்ள பகுதியில் மண்ணை கொட்டி மேடாக வைத்துள்ளனர். இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இப்பகுதியை கடக்கும் போது சற்று தடுமாற்றத்துடன் செல்ல வேண்டி உள்ளது. ஏனெனில் இந்த பகுதியின் முன்பும், பின்பும் சாலைகள் அகலமாக உள்ளது. திடீரென அந்த பகுதியில் சாலை குறுகலாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்ல வேண்டி உள்ளது. மேலும் இப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஆகவே, டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பிகளை மாற்றியமைத்து சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story