மின்சார ரெயில்களில் பொதுமக்களையும் அனுமதிக்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை


மின்சார ரெயில்களில் பொதுமக்களையும் அனுமதிக்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை
x
தினத்தந்தி 7 Oct 2020 9:29 PM GMT (Updated: 7 Oct 2020 9:29 PM GMT)

மின்சார ரெயில்களில் செல்ல பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை கூறியுள்ளது.

மும்பை,

மும்பையில் மின்சார ரெயில்கள் தற்போது அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மின்சார ரெயில்களில் செல்ல தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டில் வக்கீல்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபன்கர் தத்தா அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு துறைகள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்க தொடங்கி உள்ளது. மேலும் பல துறைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் ரெயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அரசை அறிவுறுத்தினர்.

மேலும் வக்கீல்கள் மற்றும் எங்களது ஊழியர்களை மின்சார ரெயில்களில் அனுமதிக்க வேண்டும் என்பது மட்டும் எங்களது ஆலோசனை அல்ல. அது பொதுமக்களுக்கும் தான் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆதித்ய தாக்கரே

இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்தபோது, பொதுமக்கள் மின்சார ரெயில்களில் செல்வதற்கான வழிமுறையை கண்டறிய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்டோபர் (இந்த மாதம்) 15-ந் தேதிக்குள் பொதுமக்களை மின்சார ரெயில்களில் அனுமதிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story