மனைவியை கொன்ற வழக்கில் மன்னார்குடி சிறையில் அடைக்கப்பட்ட கைதி தற்கொலை முயற்சி - மனைவி கனவில் வந்து தன்னை அழைப்பதாக போலீசாரிடம் கதறல்


மனைவியை கொன்ற வழக்கில் மன்னார்குடி சிறையில் அடைக்கப்பட்ட கைதி தற்கொலை முயற்சி - மனைவி கனவில் வந்து தன்னை அழைப்பதாக போலீசாரிடம் கதறல்
x
தினத்தந்தி 7 Oct 2020 10:30 PM GMT (Updated: 8 Oct 2020 1:19 AM GMT)

மனைவியை கொன்ற வழக்கில் கைதாகி மன்னார்குடி சிறையில் அடைக்கப்பட்ட கைதி தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, மனைவி தனது கனவில் அடிக்கடி வந்து தன்னை அழைப்பதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறி கதறி அழுதார்.

மன்னார்குடி, 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் பாலுசாமி(வயது 63). விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள்(57). கடந்த மாதம் செப்டம்பர் 23-ந் தேதி மது குடிக்க பணம் தராததால் ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை பாலுசாமி அரிவாளால் வெட்டி கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து திருமக்கோட்டை போலீசார், பாலுசாமியை மீட்டு அவரை கைது செய்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த பாலுசாமி திடீரென தப்பி சென்று விட்டார். பின்னர் அவரை போலீசார் மீண்டும் கைது செய்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்பு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மன்னார்குடி கிளை சிறையில் பாலுசாமி அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை பாலுசாமி, தான் கட்டியிருந்த கைலியால் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த சக கைதிகள் சத்தம் போட்டனர்.

இதனையடுத்து கிளை சிறை ஜெயிலர் அன்புராஜ், பாலுசாமியை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் பாலுசாமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், இறந்து போன தனது மனைவி கனவில் அடிக்கடி வந்து தன்னை அழைத்ததால் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக போலீசாரிடம் கூறி கதறி அழுதார்.

இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story