கஞ்சா கும்பலை பிடிக்க தவறிய திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் - திருச்சி டி.ஐ.ஜி. நடவடிக்கை


கஞ்சா கும்பலை பிடிக்க தவறிய திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் - திருச்சி டி.ஐ.ஜி. நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2020 10:00 PM GMT (Updated: 9 Oct 2020 1:23 AM GMT)

கஞ்சா கும்பலை பிடிக்க தவறிய திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை,

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணவாளன்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து வேறுபகுதிக்கு கடத்தி செல்லமுயன்றபோது புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் போலீசார், சிப்காட் பகுதியில் வைத்து கடத்தல் கும்பலை மடக்கி பிடித்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 88 பண்டல்களில் இருந்து 180 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் ஸ்டாலின் சரியாக செயல்படாமல் கஞ்சா கும்பலை பிடிக்க தவறியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அதிகாரிகள் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய பின் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, கஞ்சா கும்பலை பிடிக்க தவறிய சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் ஸ்டாலினை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை புதுக்கோட்டை போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story