மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 70 பேர் பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு


மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 70 பேர் பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 Oct 2020 10:30 PM GMT (Updated: 9 Oct 2020 2:08 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 முதியவர்கள் பலியானார்கள். ஒரே நாளில் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது முதியவர். காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 3-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 6-ந் தேதி இறந்து விட்டார்.

கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் 73 வயது முதியவர். காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் காரணமாக அவர் சேலம் தனியார் மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சை பலனின்றி அவர் 7-ந் தேதி இறந்து விட்டார்.

கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்தவமனையில் கடந்த மாதம் 21-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 6-ந் தேதி இறந்து விட்டார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் குணமடைந்து நேற்று 79 பேர் வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 ஆயிரத்து 392 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 751 பேர தற்போது சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இதுவரை 75 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story