விவசாயி குத்திக்கொலை: லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு


விவசாயி குத்திக்கொலை: லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Oct 2020 9:30 PM GMT (Updated: 9 Oct 2020 2:15 AM GMT)

வாய்த்தகராறில் விவசாயியை குத்திக்கொலை செய்த லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

சேலம்,

பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தும்பல் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ். இவரது மகன் இளையரசன் (வயது 27). லாரி டிரைவர்.

இதேபோன்று தும்பல் அருகே உள்ள அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (48). விவசாயி. கடந்த 14-2-2018 அன்று இளையரசன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அங்கு உள்ள காட்டு பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர். பாலசுப்பிரமணியன் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த இளையரசன், கத்தியால் பாலசுப்பிரமணியனை குத்தி கொலை செய்தார். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையரசனை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது.

இதையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட இளையரசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஆபிரகாம் லிங்கன் தீர்ப்பு அளித்தார்.

Next Story