பரமக்குடி பகுதியில் இரவு நேரங்களில் பெட்ரோல் திருடும் மர்ம கும்பல்


பரமக்குடி பகுதியில் இரவு நேரங்களில் பெட்ரோல் திருடும் மர்ம கும்பல்
x
தினத்தந்தி 8 Oct 2020 10:30 PM GMT (Updated: 9 Oct 2020 3:42 AM GMT)

பரமக்குடி பகுதியில் இரவு நேரங்களில் மர்ம கும்பல் பெட்ரோலை திருடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

பரமக்குடி,

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட காளிதாஸ் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்களும், பெண்களை கேலி செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை கண்டறிய அப்பகுதி மக்கள் தங்களது சொந்த செலவில் அந்த தெருக்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் அந்த பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடுவதற்காக வந்துள்ளனர். தொடர்ந்து வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடியுள்ளனர். அந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் அதுகுறித்து பரமக்குடி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.தொடர்ந்து பரமக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் இரு சக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்தும், இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story