திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் மின்வாரிய அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை


திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் மின்வாரிய அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Oct 2020 5:00 AM GMT (Updated: 9 Oct 2020 4:43 AM GMT)

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த மின்வாரிய அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகர் லிங்கபாய் தெருவை சேர்ந்தவர் சந்திரவாசன் (வயது 44). விண்ணவனூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சந்திரவாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் 3-வது தளத்தில் உள்ள கொரோனா வார்டில் தங்கவைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை வார்டில் இருந்த சந்திரவாசனை திடீரென காணவில்லை. அவரை மருத்துவமனை ஊழியர்கள் தேடிப்பார்த்தனர். அப்போது அவர் அங்குள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வார்டில் இருந்த பகுதியில் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் தீராத வயிற்று வலி காரணமாக தற்கொலை முடிவை எடுத்து கொண்டதாகவும், இதற்கு யாரும் பொறுப்பில்லை என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எழுதி உள்ளார்.

அதே கடிதத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டும் சந்திரவாசன் எழுதி இருந்தார். சந்திரவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசேதானைக்கான மருத்துவமனையிலேயே சேர்த்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தினால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story