வானிலை ஆராய்ச்சி மைய தகவல் பலகையில் வாசகம்: “ராமர் கோவில் கட்டக்கூடாது, ராவணனுக்கு கட்ட வேண்டும்” - கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


வானிலை ஆராய்ச்சி மைய தகவல் பலகையில் வாசகம்: “ராமர் கோவில் கட்டக்கூடாது, ராவணனுக்கு கட்ட வேண்டும்” - கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2020 5:45 AM GMT (Updated: 9 Oct 2020 6:38 AM GMT)

கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய தகவல் பலகையில் ராமர் கோவில் கட்டக்கூடாது, ராவணனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று எழுதியிருந்த வாசகங்களை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வானிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தின் வெளிப்பகுதியில் பணியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தினமும் ஒரு தகவல் எழுதி வைக்கப்படுகிறது.

நேற்று அந்த தகவல் பலகையில் மத்திய அரசை கண்டித்தும், ராமர் கோவில் கட்டக்கூடாது. ராவணன் கோவிலை கட்ட வேண்டும் என்ற வாசகம் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தகவல் பலகையில் எழுதியிருந்த வாசகங்களை போலீசார் அழித்தனர்.

மத்திய அரசை கண்டித்து எழுதப்பட்டிருப்பதை அறிந்த கொடைக்கானல் நகர பா.ஜ.க. மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கொடைக்கானல் போலீசில் பா.ஜ.க., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்புகளின் சார்பில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது.

அதில் தகவல் பலகையில், மத்திய அரசை கண்டித்தும், ராமர் கோவில் கட்டுவது குறித்து இழிவாக எழுதிய வானிலை ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் 2 ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story