மாவட்டம் முழுவதும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம் அனைத்து சலூன் கடைகளும் மூடல்


மாவட்டம் முழுவதும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம் அனைத்து சலூன் கடைகளும் மூடல்
x
தினத்தந்தி 9 Oct 2020 11:50 PM GMT (Updated: 9 Oct 2020 11:50 PM GMT)

திண்டுக்கல் அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அனைத்து சலூன் கடைகளையும் அடைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை குரும்பம்பட்டியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி முடிதிருத்தும் கடை நடத்தி வந்தவரின் மகளான 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்.

இதை கண்டித்தும், சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று தமிழ்நாடு முழுவதும் சலூன் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாவட்ட சவரத் தொழிலாளர் சங்கம் மற்றும் வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், இந்த வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்து குற்றவாளியை கைது செய்து, தண்டனை கிடைக்க செய்ய வேண்டும் என்றும், சிறுமியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் முத்தரசு, மாவட்ட பொருளாளர் அய்யாதுரை, துணைத்தலைவர் வேல்சாமி ஆகியோரும், வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கென்னடி பாபு, மாவட்ட அவைத்தலைவர் மகாராஜன் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

இதே கோரிக்கையை வலியுறுத்தி, கோவில்பட்டியில் மருத்துவர் முடி திருத்துவோர் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று 300 சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி நகரத் தலைவர் குருசாமி, துணைத் தலைவர் காளிதாஸ், செயலாளர் மாரிமுத்து, ஆலோசகர் ஈகாவேலுச்சாமி, பொருளாளர் கருமாரி ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தத்திடம் மனு கொடுத்தனர்.

அனைத்துதொழிற்சங்கங்கள் சார்பில்...

மேலும், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் கேசவன் தலைமையில், விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி நகர தலைவர் செல்வம், நகர செயலாளர் மகேந்திரன், பொருளாளர் மாடசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், ஏஐடியுசி மாவட்ட துணை தலைவர் தமிழரசன், சிஐடியு மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தலைவர் பரமசிவம், மகாத்மா காந்தி ரத்ததான கழக தலைவர் தாஸ், ஐந்தாவது தூண் தலைவர் சங்கரலிங்கம், ஜெய்பீம் அறக்கட்டளை தலைவர் தாவீது ராஜா, தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சீலா, ஐஎன் டி யு சி மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கயத்தாறு

கயத்தாறில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் ஆகியவை சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. கயத்தாரில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும், கயத்தாறு பஜாரில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநிலத் தலைவர் நடேசன், மாநில பொதுச் செயலாளர் ராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுடலைமணி, மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்லத்துரை, மாநில பிரதிநிதிகள் ராஜேந்திரன் பழனிபாரதி மற்றும் கயத்தார் கிளை சங்கத் தலைவர் காமராஜ், செயலாளர் முருகன், பொருளாளர் அய்யனார், அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

எட்டயபுரம்

தமிழ்நாடு மருத்துவர்கள் நலச்சங்கம் எட்டயபுரம் கிளையின் சார்பாக சலூன் கடைகளை அடைத்து நேற்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

Next Story