திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கில் நீதி கேட்டு ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரம் சலூன் கடைகள் அடைப்பு


திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கில் நீதி கேட்டு ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரம் சலூன் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 10 Oct 2020 12:18 AM GMT (Updated: 10 Oct 2020 12:18 AM GMT)

திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கில் நீதி கேட்டு ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரம் சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

ஈரோடு,

திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டி கிராமத்தில் வசிக்கும் முடிதிருத்தும் தொழிலாளியான வெங்கடாசலம் -லட்சுமி தம்பதியின் 12 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்து உடலில் மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு மேல்முறையீடு செய்து இந்த வழக்கை மறுவிசாரணை செய்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வழியுறுத்தியும், சலூன் கடைகள் அடைப்பு போராட்டம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சலூன் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. மேலும் தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம், தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் ஆகியவை சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சிறுமிக்கு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் தமிழர் கழக கட்சி நிறுவன தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் குணசேகரன், தலைவர் விஜய், இளம் தமிழர் கழக மாவட்ட செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்க மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி, மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

பெருந்துறை

முன்னதாக பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுமியின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து சிறுமிக்கு நீதி கேட்டு, ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் முடி திருத்தும் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பெருந்துறை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Next Story