சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் டி.கே.சிவக்குமார் நம்பிக்கை


சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் டி.கே.சிவக்குமார் நம்பிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2020 10:11 PM GMT (Updated: 11 Oct 2020 10:11 PM GMT)

இடைத்தேர்தலில் 2 தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று டி.கே.சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதை எனது தலைமையில் அல்ல, காங்கிரசின் கூட்டு தலைமையின் கீழ் இதை எதிர்கொள்கிறோம். இதில் வாக்காளர்கள் ஆளும் கட்சியை தோற்கடித்து அரசு செயல்படும் விதம் சரி இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும். கொரோனாவை தடுப்பதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டது. அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் இந்த அரசு பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த அரசின் செயல்பாடுகளால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. யாருக்கும் உதவி கிடைக்கவில்லை. பொதுமக்களின் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியுள்ளது. குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. இந்த பிரச்சினைகள் குறித்து மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மக்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

மக்களின் பிரச்சினைகள்

இளைஞர்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம். அதனை மனதில் நிறுத்தி ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் குசுமா ரவிக்கு டிக்கெட் வழங்கியுள்ளோம். இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்கவில்லை. இதன் மூலம் அக்கட்சி சிக்கலில் உள்ளது என்பதை அறிய முடிகிறது. எனது வீட்டில் நடந்த சி.பி.ஐ. சோதனையை இடைத்தேர்தலில் பயன்படுத்த மாட்டேன். இதை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். இந்த இடைத்தேர்தலில் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்போம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story