மாவட்டத்தில், 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் 306 பேர் கைது


மாவட்டத்தில், 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் 306 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2020 5:07 AM GMT (Updated: 13 Oct 2020 5:07 AM GMT)

கடலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 306 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

புதிய வேளாண்மை சட்டம், தொழிலாளர் சட்ட தொகுப்பு, புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்தும், அதற்கு துணை போகும் மாநில அரசை கண்டித்தும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி இந்த சட்டத்தை கண்டித்து நேற்று கடலூர் உழவர் சந்தை அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநிலக்குழு உறுப்பினர் குளோப் தலைமையில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அண்ணா பாலம் சிக்னல் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு மறியல் செய்வதற்காக சென்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, போராட்டத்துக்கு அனுமதி கிடையாது, ஊர்வலமாகவும் செல்லக்கூடாது என்று கூறினர். இதனால் போலீசாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி கட்சி நிர்வாகிகள் சிக்னல் அருகே கடலூர் இம்பீரியல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வேளாண்மை சட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தொழிலாளர் சட்ட தொகுப்பால் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை இல்லாமல் போய் விடும். சம்பளம் உறுதி இல்லை, புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே புதிய வேளாண் சட்டம் உள்ளிட்ட சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோஷங் களை எழுப்பினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் அரிகிருஷ்ணன், வட்டக்குழு அமாவாசை, வட்ட துணை செயலாளர் சுந்தர்ராஜா, மாயவன், ராஜா, இளங்கோவன், தமிழ்மணி, ஜெயராஜ், நாகராஜ் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வண்டிப்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த மறியலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் நிலையம் அருகில் நகர செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர், அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சித்ரா, குமார், வட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், குமாரி, பன்னீர்செல்வம் உள்பட 62 பேரை பேரை நகர போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி பஸ் நிலையம் அருகில் நகர செயலாளர் சக்திவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 35 பேரையும், விருத்தாசலம் ஸ்டேட் வங்கி பஸ் நிறுத்தம் அருகில் நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற 7 பேரையும், போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு விருத்தாசலம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மங்களூர் ஒன்றிய செயலாளர் சின்னதுரை தலைமையில் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து மாவட்டக்குழு சுப்பிரமணியன், முருகையன், ராதாகிருஷ்ணன், லோகநாதன், காசிநாதன், ராமசாமி, சொக்கலிங்கம் உள்பட 20 பேரை திட்டக்குடி போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் காட்டுமன்னார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கச்சேரி சாலையில் வட்ட செயலாளர் முருகவேல் தலைமையில் மறியல் நடந்தது. இதில் நகர கிளை செயலாளர் அய்யப்பன், கிளை செயலாளர் சிதம்பரம், குமராட்சி நகர செயலாளர் காந்தி தாஸ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சியில் வட்ட செயலாளர் ராவணராஜன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 6 பேரையும், சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகில் வட்ட செயலாளர் பூபாலன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 37 பேரையும், பெண்ணாடத்தில் நல்லூர் ஒன்றிய பொறுப்பு செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நகர துணை செயலாளர் காமராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஜயராகவன், அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரையும், ஸ்ரீமுஷ்ணத்தில் மறியல் செய்த 29 பேரையும், காடாம்புலியூரில் மறியல் செய்த 38 பேர் என மொத்தம் 11 இடங்களில் மறியல் செய்த 306 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story